Description

டாக்டர் ப.சரவணனின் இந்தக் கட்டுரைகள் முக்கியமானவை. அவை வெண்முரசின் அனைத்துப் பகுதிகளையும் வடிவம் சார்ந்தும் உள்ளடக்கம் சார்ந்தும் சுருக்கித் தொகுத்துக் கொள்கின்றன. அவற்றின் மையச்சரடு என்ன, பொதுவடிவம் என்ன, வெளிப்பாட்டு முறை என்ன என்று வகுத்துக் கொள்கின்றன. ‘வெண்முரசு’ போன்ற நாவல் அளிக்கும் பெரும் சவால் என்னவென்றால், அதை ஒட்டுமொத்தமாகப் பார்ப்பது கடினம் என்பதுதான். ஒரு நகரில் வாழ்வது போலத்தான். நாம் அதில்தான் இருப்போம். அதன் பல பகுதிகள் நம் வாழ்க்கையின் புறவடிவங்களென ஆகியிருக்கும். அதன் சந்துபொந்துகள் என்னவென்று தெளிவாக அறிந்திருப்போம். ஆனால், முழுமையாக அந்த நகரை நம் கற்பனையில் கொண்டுவர முடியாது. நகரத்தை நாம் வரைபடங்களிலேயே முழுமையாகக் காணமுடியும். இந்த நூல் டாக்டர் ப.சரவணன் ‘வெண்முரசு’ நாவலுக்கு உருவாக்கிய வரைபடம், ஒட்டுமொத்தமாக ‘வெண்முரசு’ நாவலைத் தொகுத்துக்கொள்ள, அதன் ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன உள்ளது என்று விரித்துக்கொள்ள உதவும் நூல் இது. ‘கூகிள் எர்த்’ வரைபடம்போல. அதைப் பார்க்கும்போது சலிக்காமல் நாம் செய்வது சுருக்கி சுருக்கி ஓர் உருளையாக ஆக்குவதும் பின்னர் விரித்து விரித்து நம் வீட்டை அடையாளம் காணமுயல்வதும்தான்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.